காரைக்காலில் ஊரடங்கு உத்தரவு, கரோனா தொற்று சிகிச்சை குறித்து அரசு அலுவலர்களின் ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் இன்று நடைபெற்றது.
காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், புதுச்சேரி நல்வாழ்வுத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், நலத் துறை அமைச்சர் கந்தசாமி, வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர், காரைக்கால் மார்க் துறைமுகம் சார்பில் 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான கரோனா சம்பந்தமான வென்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி முன்னிலையில் காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்குச் சென்ற புதுச்சேரி முதலமைச்சர், மருத்துவர்களிடம் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது,
“புதுச்சேரி மாநிலத்தில் எவருக்கும் தொற்றுநோய் இல்லை என்றபோதிலும் மக்கள் இதில் விழிப்பாக இருக்க வேண்டும். இதற்கு ஒரே மருந்து தனித்து இருப்பது மட்டுமே.
கரோனா தொற்று நடவடிக்கைக்காகவும், மக்கள் வாழ்வாதாரத்திற்காகவும் இடைக்கால நிவாரணம் 200 கோடி ரூபாய் நிதியை புதுச்சேரி அரசுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார்.
மேலும், கரோனா தொற்று சிகிச்சைக்கு முதலமைச்சர் நிவாரண நிதியாக தொழிலதிபர்கள், தொண்டுள்ளம் படைத்தவர்கள் புதுச்சேரி அரசுக்கு நிதி வழங்கி உதவிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க:கோவையில் 144 தடையை மீறி சாலையில் சுற்றிய 122 பேர் கைது