நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை அடுத்த குத்தாலத்தில் நேற்று காலை ஒருவர் மர்மமான முறையில் இருந்து கிடப்பதாக அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், இறந்தவர் திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தை சேர்ந்த பதநீர் வியாபாரி முரளி என்பதும், குத்தாலத்தில் உள்ள மாமியார் வீட்டில் மனைவியுடன் தங்கியிருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து காவல் துறையினர் முரளியின் மனைவியான திவ்யாவிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினார். இதில் சந்தேகமடைந்த காவல் துறையினர் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்ததில், திவ்யாவின் தம்பியான செல்வகணபதி அவரது நண்பனுடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் அதேபகுதியில் பதுங்கியிருந்த திவ்யாவின் தம்பி செல்வகணபதியை கைது செய்து விசாரித்ததில், தனது அக்காவான திவ்யாவை அடிக்கடி தரக்குறைவாக பேசியதால், ஆத்திரமடைந்து தனது நண்பர் கமலஹாசனுடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து இருவரையும் காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.