நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையிலிருந்து ஜான் என்பவருக்கு சொந்தமான படகில் அந்தோணி, வினோத், செல்வேந்திரன், டான் பாஸ்கோ, போஸ் ஆகிய ஆறு பேர் கடந்த ஒன்றாம் தேதி காலையில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
இவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே 15 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடித்துவிட்டு இன்று காலையில் கரை திரும்ப தொடங்கினர். இதையடுத்து மீன்பிடிக்க பயன்படுத்திய வலைகளை எடுத்தபோது, அதில் சிக்கியிருந்த 3 லிட்டர் கேனை எடுத்து பார்த்துள்ளனர்.
அந்தக் கேனில் சாராய வாடை வந்துள்ள நிலையில், அதனை மீனவர்களான அந்தோணி, வினோத், போஸ் ஆகிய மூவரும் குடித்துவிட்டு தூங்கினர்.
இதைத்தொடர்ந்து கரை வந்து சேர்ந்தபின் அவர்களை எழுப்பியபோது அந்தோணி இறந்த நிலையிலும், மற்ற இருவரும் மயங்கிய நிலையிலும் இருந்துள்ளனர்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக மீனவர்கள், உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்து, வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு மயங்கி இருந்த மீனவர்களை அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் சோதனை செய்த மருத்துவர்கள், அந்தோனி ஏற்கனவே இறந்ததை உறுதி செய்தனர். மயங்கிய நிலையில் இருந்த மற்ற இரு மீனவர்களுக்கும் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: திருப்பூரில் கள்ளச்சாராயம் காய்ச்சியவர் கைது!