மயிலாடுதுறை: மயிலாடுதுறை நகரின் மையப்பகுதியில் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பயிற்சி மையம் அமைந்துள்ளது. தமிழகத்தில் இந்த இடத்தில் மட்டும்தான் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பயிற்சி மையம் நிரந்தரமாக சொந்த கட்டடத்தில் இயங்குகிறது.
மேலும், இங்கு கூடைப்பந்து, கைப்பந்து, கபாடி மற்றும் தடகளப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக கபாடி பயிற்சியாளர் இல்லாததால் கபாடி பயிற்சிக்கு மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்படாமல் இருந்தனர்.
முன்னதாக, பயிற்சி மையத்தில் மீண்டும் கபாடி விளையாட்டைச் சேர்க்க அமெச்சூர் கபாடி கழகம் (Tamilnadu Amateur Kabaddi Association) உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், இந்த ஆண்டு முதல் மயிலாடுதுறையில் மீண்டும் கபாடி விளையாட்டு சேர்க்கப்படும் என்றும், இதற்கான வீரர்-வீராங்கனைகள் தேர்வு இன்று (செப்.6) நடைபெறும் என கடந்த மாதம் 29ஆம் தேதி அறிவிப்பு வெளியானது.
இதனையடுத்து, கபாடி விளையாட்டு வீரர்-வீராங்கனைக்கான கபாடி தேர்வு இன்று நடைபெற்றது. 9 வீரர்கள், 10 வீராங்கனைகள் தேர்வு செய்வதற்காக நடைபெற்ற தேர்வில், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து 700 வீரர்கள் மற்றும் 200 வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடினர். தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க துணைத் தலைவரும், அமெச்சூர் கபாடி கழக மாநிலத் தலைவருமான சோலைராஜா கலந்து கொண்டு, கபாடி தேர்வை தொடக்கி வைத்து பார்வையிட்டார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், “தமிழகத்தில் மயிலாடுதுறையில் மட்டும்தான் இந்திய விளையாட்டு ஆணையத்தின் பயிற்சியகம் நிரந்தரமாக செயல்படுகிறது. சேலம் உள்ளிட்ட பிற இடங்களில் தமிழக விளையாட்டு ஆணைய இடத்தில்தான் செயல்படுகிறது. முதற்கட்டமாக கபாடி விளையாட்டுக்கு நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் (National Center of Excellence) தொடங்க வேண்டும்” என்றார். அப்போது, மாவட்ட அமெச்சூர் கபாடி கழகத் தலைவர் ரஜினி உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க:G20 India app: ஜி20 இந்தியா செயலியின் முக்கிய அம்சங்கள் என்ன?