மயிலாடுதுறை - தரங்கம்பாடி இடையேயான 30 கி.மீ. ரயில் போக்குவரத்து 1926 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்டது. இதனால் பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் வணிகர்கள் என பல்வேறு தரப்பினரும் பலடைந்தனர். மயிலாடுதுறை செம்பனார்கோவில், பொறையார், தரங்கம்பாடி வழியாக இயக்கப்பட்ட ரயில் சேவை, 1986 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது. 60 ஆண்டுகளாக மக்களின் பயன்பாட்டில் இருந்த இந்த ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் 33 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து போராடி வருகின்றனர். திமுக, அதிமுக, காங்கிரஸ் என எந்த கட்சியை சேர்ந்தவர்கள் வந்தாலும் தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்து நாடாளுமன்ற உறுப்பினராக ஆன பிறகு அதனை நிறைவேற்றவில்லை என புகார் தெரிவிக்கின்றனர்.
கடந்த 2016 -17 ரயில்வே பட்ஜெட்டில், 117 கோடி ரூபாய் செலவில் மயிலாடுதுறை தரங்கம்பாடி இடையிலான ரயில் போக்குவரத்தை தொடங்குவதற்கு மத்திய அரசு திட்டமிடப்பட்டது. ஆனால் அதற்கான நிதி ஒதுக்காததால் தற்போது இந்த திட்டம் கிடப்பில் உள்ளது. இந்த முறை மயிலாடுதுறை- தரங்கம்பாடி ரயில் பாதை குறித்து உறுதியான வாக்குறுதி அளிப்பவர்களுக்கு மட்டுமே வாக்களிக்கப்படும் என்று இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.