நாகை மாவட்டம், மயிலாடுதுறை நகராட்சியால் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் பாதாளச் சாக்கடைத் திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டம் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில், கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்குக் கொண்டு செல்லும், பாதாளச் சாக்கடைக் குழாய்களில் தொடர்ந்து உடைப்பு ஏற்பட்டு, சாலைகளில் 20 அடி ஆழத்திற்குத் திடீர் பள்ளம் ஏற்படுவது தொடர் கதையாகி உள்ளது.
இதனால் பாதாளச் சாக்கடை கழிவு நீர் பல்வேறு வீதிகளில் வழிந்தோடுகிறது. இதனால், பொதுமக்கள் பல்வேறு நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். பாதாளச் சாக்கடை குறித்து இந்த மாதத்தின் தொடக்கத்தில் மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி.நாயர் தலைமையில் வல்லுநர் குழு ஆய்வு மேற்கொண்டது. அதில்,மேலும் சாலைகளில் ஒரு சில இடங்களில் பள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆட்சியர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு தரங்கம்பாடி சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த லாரி பள்ளத்தில் சிக்கியது. இதையடுத்து லாரி அங்கிருந்து அகற்றப்பட்டு, பள்ளத்தைச் சுற்றி தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. பாதாளச் சாக்கடையால் மயிலாடுதுறை நகர மக்கள் தினந்தோறும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பாதாளச் சாக்கடை அமைக்கப்பட்டதில் உள்ள குறைபாடுகளை அரசு போர்க்கால அடிப்படையில் நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: அரசு கலைக்கல்லூரி புதிய கட்டடத்தை திறந்து வைத்த முதலமைச்சர்