மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் 1,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் கடலை சாகுபடி செய்துவருகின்றனர். மூன்று மாத காலப் பயிரான கடலை சாகுபடியை இப்பகுதி விவசாயிகள் ஆர்வத்துடன் செய்துவருகின்றனர்.
மூன்று போகம் கடலை சாகுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது இரண்டு போகம்கூட சாகுபடி செய்ய முடியவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். பருவம் தப்பிய மழை உள்ளிட்டவற்றால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது ஆடி பட்டம் கடலை சாகுபடி அறுவடைக்குத் தயாரான நிலையில் பருவம் தவறிய திடீர் மழையால் கடலை சாகுபடியில் இலைப்புள்ளி நோய், இலை சுருட்டு நோய் தாக்குதலால் செடிகள் கருகிவருகின்றன. இதனால் சாகுபடிக்குச் செலவு செய்த தொகையைக்கூட திருப்பி எடுக்க முடியாத அளவு மகசூல் குறைந்துள்ளது.
கடலை சாகுபடி விவசாயத்தை ஊக்குவிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தரங்கம்பாடி கடலை விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா தடுப்பூசி செலுத்துவதில் 70% விரைவில் பெறுவோம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்