தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் காவல் துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சந்தேகத்திற்கிடமான முறையில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ளது.
அமெரிக்காவின் ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணத்தைப் போன்று தமிழ்நாட்டில் நிகழ்ந்திருக்கும் இந்தச் சம்பவத்தை கண்டித்து எதிர்க் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்திற்கு நீதி கோரி நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் என பல பிரபலங்களால் குரல் எழுப்பப்பட்டு இவ்விவகாரம் உலக அரங்கில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
காவல் துறையின் அரக்கத்தனமான செயலுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், இச்சம்பவம் தொடர்பான வழக்கு சிபிஐக்கு மாற்றப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்நிலையில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முத்தரசன் தமிழ்நாடு அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
நாகப்பட்டினத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், "சாத்தான்குளம் சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்கு அரசு உத்தரவிட்டது காலம் கடத்தும் செயல். தமிழ்நாடு அரசு செய்த தவறை மறைப்பதற்காக, பணம் கொடுத்து நீதியை மறைக்க முயற்சிக்கிறது. உடுமலை சங்கர் கொலை வழக்கில் தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பும், 50 ஆண்டுகளுக்கு முன்பு கீழ்வெண்மணி சம்பவத்திற்கு வழங்கப்பட்ட தீர்ப்பும் ஒன்றாக உள்ளது" எனக் குற்றம் சாட்டினார்.
முன்னதாக சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த 27 காவலர்களும் பணி இடமாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சாத்தான்குளம் காவல்நிலையத்தில் 27 காவலர்கள் நியமனம்!