மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, திருமுல்லைவாசல், பூம்புகார், மடவாமேடு, சந்திரபாடி, பழையார் உள்ளிட்ட 13 மீனவ கிராமங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள், சுருக்கு மடி வலைக்கு அனுமதி வழங்கக்கோரி, நேற்றிலிருந்து தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடலில் இறங்கிப் போராட்டம்
போராட்டத்தின் இரண்டாம் நாளான இன்று (ஜூலை.18), சுருக்கு மடி வலைக்கு அனுமதி வழங்கக்கோரி மடவாமேடு மீனவ கிராம மக்கள் கடலில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, அவர்களிடம் புதுப்பட்டினம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு, கடலில் இறங்கும் போராட்டத்தை கைவிட்டுட்டு, மீண்டும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சற்று பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டத்தைத் தீவிரப்படுத்த யோசனை
போராட்டத்திற்கு அரசு செவி சாய்க்கவில்லை என்றால் போராட்டத்தைத் தீவிரப்படுத்தப்போவதாகவும், ரேஷன் கார்டு மற்றும் ஆதார் அட்டைகளை அரசு அலுவலர்களிடம் ஒப்படைக்கப்போவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
கடல் வளத்தை பாதுகாக்கும் நோக்கோடு சுருக்கு மடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பேனர் வைக்கும் திமுகவினர் மீது நடவடிக்கை பாயும் - ஆர்.எஸ். பாரதி எம்.பி