சீர்காழியை அடுத்த மாதானம் முதல் தரங்கம்பாடி வரை 29 கி.மீ தூரம் வரை கெயில் நிறுவனம் எரிவாயு குழாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக சீர்காழியை அடுத்த நாங்கூரில் விளைநிலங்களுக்கு இடையே குழாய் பதிக்கும் பணியை கடந்த 13ஆம் தேதி விவசாயிகளும், கிராம மக்களும் தடுத்து நிறுத்திப் போராடினர்.
தற்காலிகமாக நிறுத்தப்பட்ட பணிகள் குறித்து நேற்று சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் சபிதாதேவி தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், விவசாயிகள் அதனைப் புறக்கணித்துச் சென்றனர். இதனையடுத்து நாங்கூர் பகுதியில் இன்று காலை முதல் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். பின்னர் அங்கு வந்த கெயில் நிறுவன அதிகாரிகளும், ஊழியர்களும் குழாய் பதிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். காவல்துறையினர் சூழ்ந்து நிற்பதால் விவசாயிகளும், கிராம மக்களும் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.