மயிலாடுதுறை புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, மாவட்ட எல்லை வரையறை தொடர்பான பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நாளை (ஜூலை 30) நடைபெறவுள்ளது. இந்நிலையில், இன்று (ஜூலை 29) முன்னாள் எம்எல்ஏவும், திமுக மாநில தேர்தல் பணிக்குழுச் செயலாளருமான குத்தாலம் பி. கல்யாணம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், ”மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்டுவரும் 75 மருத்துவக் கல்லூரிகளில் 11 மருத்துவக் கல்லூரிகள் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், ஒரு மருத்துவக் கல்லூரியை மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மயிலாடுதுறை-தரங்கம்பாடி-காரைக்கால் தடத்தில் மீண்டும் ரயில் சேவையைத் தொடக்க வேண்டும்.
மயிலாடுதுறை திருவிழந்தூரில் பரிமள ரெங்கநாதர் கோயில், பொதுப்பணித் துறைக்குச் சொந்தமாக உள்ள 5 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய பேருந்து நிலையம் அமைக்க ஏற்கெனவே அடிக்கல் நாட்டப்பட்டது. எனவே, அதே இடத்தில் புதிய பேருந்து நிலையத்தை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மயிலாடுதுறை நகராட்சியின் சாக்கடைத் திட்டத்தில், குழாய்களில் அடிக்கடி ஏற்படும் பிரச்னையைத் தற்காலிகமாகச் சரிசெய்வதை விடுத்து, முழுமையாகப் புதுப்பிக்க வேண்டும்” என்றார்.