நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே திருக்கடையூரில் அருள்மிகு அபிராமி அம்பாள் உடனாய அமிர்தகடேஸ்வரர் ஆலயம் உள்ளது. இவ்வாலயத்தில் புராண காலத்தில் எமதர்மராஜா, மார்க்கண்டேயரின் உயிரைப் பறிக்க வந்தபோது, மார்க்கண்டேயர் சிவபெருமானிடம் தஞ்சம் அடைகிறார்.
மார்க்கண்டேயரின் உயிரைப் பறிக்க எமன் வீசிய பாசக்கயிறு, சிவபெருமான் மீது பட, அவர் காலசம்ஹாரமூர்த்தி உருவம் எடுத்து எமனை வதம்செய்யும் யமசம்ஹாரம் திருக்கடையூரில் நடைபெற்றதாக ஆலய வரலாறு கூறுகிறது.
இந்த ஆலய வரலாற்றை விளக்கும்விதமாக யமசம்ஹார நிகழ்ச்சி ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழாவில் நடைபெறும். அந்த வகையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக பக்தர்களின்றி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், காலசம்ஹாரமூர்த்தி, பாலாம்பிகையுடன் வீரநடனத்துடன் மண்டபத்திற்கு எழுந்தருளி வீரநடனம் புரிந்தார்.
பின்னர், எமன் எருமைக்கடா வாகனத்தில் மார்க்கண்டேயரை துரத்தும் நிகழ்ச்சியும், தொடர்ந்து எமனை இறைவன் சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
ஊரடங்கு காரணமாக பக்தர்களின்றி ஆகமமுறைப்படி ஆலயத்தின் உள்ளே தருமபுரம் ஆதீனம் குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் சிவாச்சாரியார்கள், கோயில் சிப்பந்திகள் தகுந்த இடைவெளியுடன் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: சென்னையில் இன்று ஒரே நாளில் ஆறு காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி!