நாகை மாவட்டம் குத்தாலம் மேலச்செட்டி தெருவைச் சேர்ந்தவர் சூரி. இவரது மருமகன் ஆனந்த் (32). கடந்த 14 நாள்களுக்கு முன்பு லண்டனிலிருந்து பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அங்கு அவரை மருத்துவக் குழுவினர் முழுப் பரிசோதனை செய்த பிறகு வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சில நாள்கள் கழித்து ஆனந்த் குத்தாலத்திலுள்ள தனது மாமனார் வீட்டிற்கு வந்துள்ளார். ஆனந்த் வெளிநாட்டிலிருந்து வந்ததால், அவர் கோவிட்-19 வைரஸ் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகித்த மயிலாடுதுறை சுகாதார அலுவலர்களும் அவரை பரிசோதனை செய்து மீண்டும் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில், மயிலாடுதுறை அரசு மருத்தவமனையில் சிகிச்சையில் இருந்த ஆனந்த் தப்பிச் சென்றுள்ளார் என்றும், அவரை கண்டால் சுகாதாரத் துறைக்கு தகவலளிக்க வேண்டும் என்றும் எழுதிய பதிவு ஒன்று வாட்ஸ்அப்பில் வைரலாக பரவியது.
இதனால் கடும் மன உளைச்சலுக்குள்ளான ஆனந்த் இது குறித்து மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் கூறைநாடு பகுதியைச் சேர்ந்த கில்லி பிரகாஷ் என்பவரை கைது செய்தனர்.

இதனையடுத்து , பாஜக பிரமுகரான புகழேந்தி இன்று குத்தாலம் பேரூராட்சியில் ஏலம் நடைபெற்றபோது, ’ஆனந்த் என்பவர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏலத்தை ஏன் தற்போது நடத்துகிறீர்கள்?’ எனக் கேட்டு ஏலக்கூட்டத்தை நடத்த எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
இதனையறிந்த ஆனந்த் தொடர்ந்து இதுபோல தன்னை குறிவைத்து வதந்தி பரப்பப்படுவது குறித்தும், அதனால் தான் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும் குத்தாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் புகழேந்தியையும் கைது செய்து சிறையிலடைத்தனர்.
இதையும் படிங்க : கரோனா வைரசால் சட்டமன்றத்தை ஒத்திவைக்கத்தேவையில்லை: ஸ்டாலினுக்கு எடப்பாடி பதில்!