மயிலாடுதுறை: கட்டுமான வாரியத் தலைவர் பொன்குமார் மயிலாடுதுறையில் செய்தியாளரைச் சந்தித்தார். அப்போது, "கடந்த 10 ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த நலவாரியப் பணிகளில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. மு.க. ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற 50 நாள்களில் 50 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளோம்.
மாவட்ட வாரியாக ஆய்வுசெய்து வாரியத்தில் பதிவுசெய்துள்ள தொழிலாளர்களுக்கு ஒரு மாதத்திற்குள் விண்ணப்பத்தைச் சரிபார்த்து பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளேன். தமிழ்நாட்டில் சுமார் மூன்று கோடி பேர் அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களுக்கான தனித்தனி வாரியத்தை அமைத்துத் தந்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.
அவரது ஆட்சிக்காலத்தில் 17 வாரியங்கள் அமைக்கப்பட்டன. தொழிலாளர்களுக்கு உடனுக்குடன் நலத்திட்ட பயன்கள் கிடைத்தன. தொழிற்சங்க நிர்வாகிகள் முறையாகச் செயல்பட வேண்டும். தவறான கண்ணோட்டம் எந்தத் தொழிற்சங்கத்தின் மீதும் வந்துவிடக் கூடாது.
தொழிலாளர் திறனை மேம்படுத்த கட்டுமான உயர்பயிலகம் என்ற அமைப்பை உருவாக்கினேன். ஆனால், உயர்பயிலகம் செயல்படாமல் முடங்கியுள்ளது. ஆண்டிற்கு ஒரு லட்சம் தொழிலாளர்களின் திறனை மேம்படுத்தும் நோக்கில் அது தொடங்கப்பட்டது. இதில் பயிற்சி பெறுபவர்களுக்கு அரசு சான்றும், உதவித்தொகையும் வழங்கப்படும்.
வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு வாரியம்
இந்தியாவிலேயே வெளிநாடுவாழ் தமிழர்களுக்குத் தனித்துறையைத் தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது. அதற்கான வாரியமும் உருவாக்கப்பட உள்ளது. வெளிநாடு செல்பவர்கள் இந்த வாரியத்தில் பதிவு செய்துகொண்டால் வெளிநாட்டில் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் இந்த வாரியம் அதனைக் கண்காணித்து தீர்த்துவைக்கும்.
மயிலாடுதுறை மாவட்டத்திற்குத் தனியாக நலவாரிய அலுவலகம் ஏற்படுத்தப்படும். அதற்கான பணிகள் நடந்துவருகின்றன.
கட்டுமான பொருள்களின் விலை மிகக் கடுமையாக உயர்ந்து இருக்கிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கரோனாவால் பொதுமுடக்கம் போடப்பட்ட நிலையில் கட்டுமான பணிகள் பாதிப்படைந்தன.
விலை உயர்வைக் கட்டுப்படுத்த கோரிக்கை
ஆனால், செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி சிமெண்ட் விலை உயர்த்தப்பட்டது. இது குறித்து முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்ததையடுத்து ரூ.50 முதல் 70 ரூபாய் வரையில் சிமெண்ட் விலை குறைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், சிமெண்ட் விலையை மீண்டும் உயர்த்துவதற்கான முயற்சிகள் செய்யப்படுகின்றன. மணல் குவாரிகளை ஏலம் விடுவதற்கு புதிய முறையைக் கையாள அரசு திட்டமிட்டுள்ளது.
கட்டுமானத்திற்கு என்று தனித் துறையை உருவாக்க வேண்டும். கட்டமைப்புப் பணிகள் எந்த நாட்டில் நன்றாக இருக்கிறதோ அங்கு தொழில்வளம் பெருகும், பொருளாதார வளர்ச்சி ஏற்படும். கட்டுமான பொருள்கள் விலை உயர்வைக் கட்டுப்படுத்த நிரந்தரமாக விலை நிர்ணயக் குழுவை ஏற்படுத்த வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: வயில்வெளி வழியே இடுகாட்டுக்கு பயணம்... கடும் சிரமத்தில் கொற்றவநல்லூர் மக்கள்