மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோவிலை அடுத்த பெருமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் இந்திராணி(21). பள்ளிப் பருவத்திலிருந்தே விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவர். கல்லூரி படிப்பின்போதும் கைப்பந்து அணியில் இணைந்து விளையாடி வந்தார்.
கல்லூரிகளுக்கு இடையிலான போட்டிகளில் பல்வேறு வெற்றிகளை பெற்றிருக்கிறார். கல்லூரி படிப்பு நிறைவடைந்ததையடுத்து குரூப் 2 தேர்வுக்கு தயாராகி வருகிறார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் நாமக்கல்லில் நடைபெற்ற மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றார். பின்னர் கடந்த மார்ச் மாதம் கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று தமிழ்நாடு சார்பில் விளையாடி மீண்டும் தங்கம் வென்றார்.
அதன் பின்னர் தற்போது நேபாளில் நடைபெற்ற சர்வதேச கைப்பந்து போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்று விளையாடி தங்கப்பதக்கம் பெற்று பெருமை சேர்த்துள்ளார். இந்நிலையில் பதக்கம் வென்று சொந்த ஊர் திரும்பிய இந்திராணிக்கு மயிலாடுதுறை நகராட்சி நூலகத்தில் சென்ட்ரல் லயன்ஸ் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் பங்கேற்ற நிர்வாகிகள் அடுத்த ஆண்டு முழுவதும் இந்திராணியின் விளையாட்டுக்கு ஆகும் முழுச் செலவு உட்பட அவரது கல்விச் செலவினையும் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தனர்.
இதையும் படிங்க : கோவிட்-19: கொள்கையை மறு பரிசீலனை செய்யவேண்டும்!