மயிலாடுதுறை: அம்பேத்கரின் 65ஆம் ஆண்டு நினைவு தினம் பல்வேறு இடங்களில் அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில் மயிலாடுதுறை அருகே பட்டவர்த்தி கிராமத்தில் பேருந்து நிறுத்தம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் மா. ஈழவளவன் தலைமையில் புதிதாக அம்பேத்கரின் திருவுருவப் படத்தை வைத்து அஞ்சலி செலுத்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனால் சாதி மோதல் ஏற்படும் என்று கூறி, மற்றொரு பிரிவினர் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். இதனால் பட்டவர்த்தி கிராமத்தில் காவல் துறையினர் குவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளர் மா. ஈழவளவன் அம்பேத்கர் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்தார்.
அப்போது மற்றொரு பிரிவினர் கற்களை வீசி தாக்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இரண்டு தரப்பினரும் கற்களை வீசி மாறி மாறித் தாக்கிக் கொண்டனர்.
இதனால், காவல் துறையினர் லேசான தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி. சுகுணாசிங், மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி, டிஎஸ்பி வசந்தராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்வீச்சில் காயமடைந்த நான்கு பேர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: குற்றஞ்சாட்டப்பட்டவரைக் கைதுசெய்ய வந்த காவலர்களுக்கு அடி உதை