மயிலாடுதுறை: சீர்காழி தாலுகா கீழமூவர்க்கரை மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் நிலவன். இவர் மீன்பிடி தொழில் செய்துவருகிறார். இவருடன் கர்ணன், ஜெயக்குமார், மாதவன், முரளி, ராஜா உள்ளிட்ட ஐந்து பேர் உடன் பிறந்தவர்கள். இந்நிலையில், நிலவன் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் அமைந்துள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலுக்கு வெண்கலத்தாலான படிக்கட்டு அமைத்து தனது பெயர் பொறித்து அன்பளிப்பு செய்துள்ளார்.
இது தொடர்பாக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் நடந்த கூட்டத்தில் பெயர் பொறித்து வைக்கக் கூடாது என அப்பகுதியில் உள்ள முக்கியஸ்தர்கள் கூட்டத்தில் கூறியுள்ளனர்.
இதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக நிலவன், கர்ணன், ஜெயகுமார் உள்ளிட்ட ஆறு குடும்பங்களை ஊரைவிட்டு ஒதுக்கிவைத்துள்ளனர். மேலும் இந்த ஆறு குடும்பங்களுடன் யாரும் பேச்சுவார்த்தை வைத்துக்கொள்ளக் கூடாது. இதனை மீறினால் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும், கீழமூவர்க்கரையில் உள்ள கடைகளில் அத்தியாவசிய பொருள்களை அவர்களுக்கு வழங்கக் கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் நடந்த கோயில் திருவிழாவில் ஒலிபெருக்கி மூலம் ஆறு குடும்பங்களின் பெயரைப் படித்து ஊரைவிட்டு ஒதுக்கிவைத்துள்ளதாகவும் இவர்கள் கோயில் திருவிழாவில் கலந்துகொள்ளக் கூடாது எனத் தெரிவித்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த ஆறு குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் சீர்காழி தாலுகா அலுவலகத்திற்கு வருகைபுரிந்து வட்டாட்சியரிடம் மனு அளித்துவிட்டு வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், நாளை (ஆக. 27) நடைபெறவுள்ள கோயில் திருவிழாவில் தங்களை அனுமதிக்க வேண்டும். இல்லையென்றால் குடும்பத்துடன் சேர்ந்து தற்கொலை செய்துகொள்வதாகத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க : சென்னையில் 200 வார்டுகளில் தடுப்பூசி முகாம்