நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் பழைமை வாய்ந்த டி.பி.டி.ஆர். எனப்படும் திவான் பகதூர் தி.அரங்காச்சாரியார் தேசிய மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. 1900ஆம் ஆண்டு கோமல் சீனிவாசராகவ ஐயங்கார் என்பவரால், திண்ணைப் பள்ளியாக ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் சிறிய கட்டிடத்தில் 1902ஆம் ஆண்டு முறைப்படி பள்ளியாக தொடங்கப்பட்டது.
120 ஆண்டுகள் கண்ட பள்ளி
1954ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை 120 ஆண்டுகளாக இப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. மயிலாடுதுறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமப்புறங்களைச் சார்ந்த மாணவர்கள் இங்கு படித்துவருகின்றனர்.
இங்கு படித்த பல மாணவர்கள் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் உயர் பதவிகளை வகித்துவருகின்றனர். தற்போது முன்னாள் மாணவர்களின் நிதி உதவியுடன், பழைய பள்ளிக்கட்டடம் இடிக்கப்பட்டு, புதிதாக கட்டடம் கட்டப்பட உள்ளது. இதற்காக பள்ளிக்கட்டடம் இடிக்கும் பணி இன்று (பிப்.24) முதல் தொடங்கும் என்று பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பள்ளியில் குவிந்த முன்னாள் மாணவர்கள்
இதனையடுத்து பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் பள்ளியை சுற்றிப்பார்க்க, இரண்டு நாட்களுக்கு பள்ளி நிர்வாகம் அனுமதி அளித்திருந்தது. இங்கு பயின்ற முன்னாள் மாணவர்கள், பள்ளிக்கு வந்திருந்து, தாங்கள் பயின்ற வகுப்பறைகளில் அமர்ந்திருந்தும், புகைப்படம் எடுத்தும் மலரும் நினைவுகளில் திளைத்தனர்.
பழமைவாய்ந்த பள்ளிக்கட்டடம் இடிக்கப்படுவது ஒருபுறம் வருத்தமாக இருந்தாலும், காலத்தின் மாற்றத்திற்கு ஏற்ப புதிய கட்டடம் கட்டப்படுவது மகிழ்ச்சியாக இருப்பதாக முன்னாள் மாணவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: '96' பட பாணியில் 50ஆண்டுகள் கழித்து சந்தித்த முன்னாள் மாணவர்களின் நெகிழ்ச்சியான சந்திப்பு!