மதுரை: பழங்காநத்தம் புறவழிச் சாலையில் அமைந்துள்ள துரைசாமி நகர்ப் பகுதியில் உள்ள வாகை மரம் ஒன்றில் திடீரென நீர் பீய்ச்சி அடிக்கத் தொடங்கியது. இதனை வியந்து பார்த்த அப்பகுதி மக்கள் தங்களது வீடுகளுக்கு அந்நீரை வாளி வாளியாய் பிடித்துச் சென்றனர்.
இது குறித்து மரங்கள் ஆய்வாளரும், மதுரை அமெரிக்கன் கல்லூரி விலங்கியல் துறை உதவிப் பேராசிரியருமான ராஜேஷ் கூறுகையில், “பொதுவாக எல்லா மரங்களும் தங்களது வளர்ச்சிக்காகவும் உணவு தயாரிக்கவும் நீரை உறிஞ்சி சேமித்து வைத்துக்கொள்வது வழக்கம். அதன் கொள்ளளவு மரங்களைப் பொறுத்து மாறுபடும்.
யானைக்கால் மரங்களில் மிக அதிக அளவிலான நீர் சேமிக்கப்படுகிறது. இதில் குறிப்பிட்ட வாகைமரம் மிக வயதானதாக இருக்கலாம். அதேநேரம் இந்த மரங்களில் ஏற்படும் பாக்டீரியா தொற்றின் காரணமாக ஏற்படும் வாய்வு அழுத்தம் இதுபோன்று நீரை பீய்ச்சி அடிக்க காரணமாக உள்ளது.
பல நேரங்களில் அந்த நீர் லிட்டர் கணக்கில் வெளியேறும். இந்த நீர் மரங்களுக்கு கீழே உள்ள பிற செடிகளின் மீது படும்போது அந்தத் தாவரங்கள் பட்டுப்போகும் வாய்ப்பும் உண்டு. ஆகையால் பொதுமக்கள் இந்த நீரைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது” என்றார்.
வாகை மரத்திலிருந்து நீர் பாய்ந்துவருவதனால், இதில் ஏதேனும் நீர் குழாய் பொருத்தப்பட்டுள்ளதா என இன்று (ஆகஸ்ட் 27) மதுரை மாநகராட்சி ஆணையம் ஆய்வு மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை போலி சிங்கம் - மதன் ரவிச்சந்திரன் விமர்சனம்