மதுரை விமான நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்களை முன்கள பணியாளர்களாக கருத்தில் கொண்டு அவர்களுக்கும், கரோனா தடுப்பூசி போடப்பட்டது.
அரசு, தனியார் விமான நிறுவன ஊழியர்களுக்கு, விரைவாக கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை, மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் வெளியிட்டது.
இந்நிலையில், விமான நிலைய ஊழியர்கள், சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர், தீயணைப்புத்துறை, குடியுரிமைத்துறையினர் என 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
தடுப்பூசி போட்டுக் கொண்ட ஊழியர்களிடம் செவிலியர்கள் 'உடல் உபாதை ஏற்பட்டால் காய்ச்சலுக்கு பயன்படுத்தப்படும் மாத்திரை மட்டுமே சாப்பிட வேண்டும். வேறு நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட மாத்திரைகள் எதுவும் சாப்பிடக் கூடாது' என அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், குறைந்தபட்சம் 2 நாள்கள் புகைபிடிக்ககூடாது, 5 நாள்களுக்கு மது அருந்தக்கூடாது எனவும் அறிவுறுத்தினர்.
பொதுமக்கள் தங்களது ஆதார் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, விவசாய அடையாள அட்டை உள்ளிட்ட 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காண்பித்து, அதன் மூலம் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என சுகாதாரத் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விமான நிலைய இயக்குனர் செந்தில்வளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
"வெளிமாநிலங்களிலிருந்து மதுரைக்கு வரும் பயணிகளிடமிருந்து விமான நிலைய ஊழியர்களை கரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில் அனைத்து விமான நிலைய ஊழியர்கள், தற்காலிக ஊழியர்கள் அனைவருக்கும் கரோனா முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது" எனத் தெரிவித்தார்.