மதுரை: தேவேந்திர குல வேளாளர் என்ற புதிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள வாதிரியான் என்ற சாதியை நீக்க வேண்டும். இதற்கு முன் இருந்தது போல எஸ்.சி. பட்டியலில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்ற பொது நல மனு மீதான விசாரணையில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு வாதிரியார் மகாஜன சங்க செயலாளர் தர்மநாதன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், "எங்கள் சமூகத்தினர் தமிழ்நாட்டில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் அதிகம் வசிக்கின்றனர்.
எங்களது சமூகம் எஸ்சி பட்டியலில் உள்ளது. குடும்பன், பன்னாடி, காலாடி, கடையன், தேவேந்திர குலத்தான், பள்ளர் மற்றும் வாதிரியான் ஆகிய சமூகங்களை தேவேந்திர குல வேளாளர் என்ற ஒரே பெயரில் அழைக்க கோரிக்கை இருந்தது. ஆனால், வாதிரியான் சமூகத்தை தேவேந்திர குல வேளாளர் என்ற ஒரே பிரிவில் சேர்க்க வேண்டாமென்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இதுதொடர்பாக அமைக்கப்பட்ட குழுவிடமும் எங்களது கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதை ஏற்று குழு பரிந்துரைத்தது. ஆனால், மாநில அரசு பரிந்துரைத்ததன் அடிப்படையில் 7 உட்பிரிவுகளையும் சேர்த்து தேவேந்திர குல வேளாளர் என மத்திய அரசு சட்டத் திருத்தம் செய்துள்ளது. இது ஏற்புடையதல்ல. எனவே, அந்த சட்டத்திருத்தத்திற்கு தடை விதித்தும், ரத்து செய்தும் உத்திரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி M.துரைசாமி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: மரக்காணம் கலவரம்: பாமக தரப்பு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் - நீதிமன்றம் அதிரடி