திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த நாராயணமூர்த்தி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினை தாக்கல் செய்திருந்தார்.
அதில், "தமிழர்களின் பழம்பெரும் அடையாளமாகக் குமரிக்கண்டம் விளங்கியது என்பது தொல்காப்பியம், அகத்தியம் உள்பட பல்வேறு பழங்கால இலக்கியங்கள் மூலம் தெரியவருகின்றது. தேசிய கடல்சார் நிறுவனத்தின் ஆய்வு அடிப்படையில் கடல் மட்டம் கடந்த பத்தாயிரம் ஆண்டுகளில் 60 மீட்டர் அளவுக்கு உயர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
அதனடிப்படையில் குமரிக்கண்டம் கடலில் மூழ்கியிருக்கலாம் என்பது உறுதி செய்யப்படுகிறது. மேலும், குமரிக்கண்டத்தின் ஒரு எல்லையே மடகாஸ்கர் எனவும் ஆய்வு முடிவுகள் குறிப்பிடுகின்றன. தமிழ் மொழியில் 30 விழுக்காட்டை தற்போது மடகாஸ்கரில் இருக்கும் பழங்குடியினர் பயன்படுத்திவருவதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
நீருக்கடியில் முறையான தொல்பொருள் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டால் குமரிக்கண்டம் தொடர்பான ஆச்சரியமூட்டும் தகவல்கள் வெளியில் வரும். மகாபாரதத்தின் அடிப்படையில் குஜராத் மாநிலம் துவாரகாவில் நீருக்கடியில் தொல்பொருள் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்நாடு அரசும் தேசிய கடல்சார் நிறுவனத்தோடு இணைந்து பூம்புகாரில் நீருக்கடியில் ஆராய்ச்சியை மேற்கொண்டது. ஆகவே கடலில் மூழ்கிய குமரிக்கண்டம் தொடர்பான உண்மைகளை வெளிக்கொணரும் வகையில் குமரி மாவட்டத்திற்கு தென் பகுதியில் நீருக்கடியில் தொல்லியல் ஆராய்ச்சி மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், "இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்க இரண்டு வார கால அவகாசம் கோரப்பட்டது.
இந்த வழக்கில் உதவுவதற்காக நியமிக்கப்பட்ட, ஒரிசா பாலு" தஞ்சை தமிழ்பல்கலைக்கழகம் முன்பாகவே இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டது. லெமூரியா கண்டத்தோடு தொடர்புடையதாக சில அடையாளங்களும் கிடைக்கப்பெற்றுள்ளன. மேலும், சிலா திரிபாதி எனும் மரைன் ஆர்க்கிலாஜிஸ்ட் இது குறித்து ஆய்வு செய்துள்ளார். அவரிடம் இதுகுறித்த விபரங்கள் இருக்கும். அதோடு செம்மொழி தொடர்பாக தஞ்சை தமிழ் பல்கலைக்கழக அதியமான், ஜெயக்குமார் ஆகியோர் ஆய்வொன்றை மேற்கொண்டனர். ஆனால் அதுகுறித்து அறிக்கை எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை”. என தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து நீதிபதிகள், சிலா திரிபாதியை வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவுமாறு கோரினர். தொடர்ந்து, அரசு தரப்பில் பதில் மனுதாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் நான்காம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.