அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள் பணி நியமனம் செய்ய அனுமதி வழங்கி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு வெள்ளிக்கிழமை (அக்.9) நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "2018ஆம் ஆண்டு தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்த நிலையில் அந்த உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை.
இது குறித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவமதிப்பு வழக்கும் இரண்டு ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இதுபோன்று பள்ளி கல்வித் துறைக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளில் பல வழக்குகள் உத்தரவு நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இது குறித்து 50 விழுக்காடு வழக்குகளில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது அரசின் அரசின் துறைசார்ந்த அலுவலர்களின் மெத்தனப்போக்கை காட்டுகிறது.
அரசியல் தலையீடு உள்ள சில வழக்குகளில் மட்டுமே அவசரமாக வழக்குகள் துரிதப்படுத்தப்படுகின்றன.
இந்த அவமதிப்பு வழக்கில் பள்ளிக் கல்வித் துறையின் செயலர், இயக்குநர்களை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை எதிர் மனுதாரராக சேர்த்துக் கொள்கிறது.
தமிழ்நாட்டில் உபரியாக உள்ள ஆசிரியர்களுக்காக அரசு ஆண்டுக்கு 444 கோடி ரூபாய் ஊதியமாக வழங்கிவருகின்றது.
ஆனால் அவர்களின் பணி முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்பது கேள்விக்குறியே. இந்த வழக்கில் மெத்தனமாகச் செயல்பட்ட புதுக்கோட்டை மாவட்ட பள்ளிக் கல்வித் துறை அலுவலருக்கு ஐந்தாயிரம் ரூபாய் அபராதமாக விதிக்கப்படுகின்றது.
இந்த அபராத தொகை அவரது ஊதியத்தில் அரசு பிடிமானம் செய்ய வேண்டும்" எனத் தெரிவித்தனர்.
மேலும், கல்வித் துறை அலுவலர்களுக்கு முறையான சட்ட ஆலோசனை கிடைக்கப்பெறாததால் இதுபோன்று நடைபெறுகின்றது என சுட்டிக்காட்டிய நீதிபதிகள், எனவே அவர்களுக்கு முறையான சட்ட ஆலோசனைகளை ஏன் தமிழ்நாடு அரசு நியமனம் செய்யக்கூடாது எனவும் கேள்வி எழுப்பினர்.
இது தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறைச் செயலர் மற்றும் இயக்குநர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.