மதுரை பரசுராமன்பட்டி பகுதியில் திமுகவின் 28ஆவது வார்டு அலுவலகம் உள்ளது. இதில் வட்டச் செயலாளராக உள்ள செங்கிஸ்கான் என்பவர் அலுவலகத்திற்குள் இருந்தபோது, பயங்கர ஆயுதங்களுடன் காரில் வந்த மர்ம கும்பல் ஓன்று அலுவலகத்தில் பணியாற்றும் முத்துப்பாண்டி என்பவரை கேட்டுள்ளனர். அவர் இங்கு இல்லை என கூற அலுவலகத்தில் இருந்த கட்சி பதாகைகள்,சேர்,டேபிள் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கி அங்கு அமர்ந்திருந்த செங்கிஸ்கானையும் தாக்கியுள்ளனர்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தகராறில் ஈடுபட்ட ஆனந்தன், உதயகுமார், சுரேஷ், ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஏழு பேரையும் தேடி வருகிறார்கள். முதல்கட்ட விசாரணையில் முத்துப்பாண்டியை முன்விரோதம் காரணமாக வெட்டிக் கொலை செய்ய திட்டமிட்டது தெரியவந்தது. சில மாதங்களுக்கு முன்பு இந்த கட்சி அலுவலகத்தில் நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் பயங்கர ஆயுதங்களுடன் வந்த கும்பல் அலுவலகத்தை அடித்து நொறுக்கியது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.