மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் செல்லும் சாலையான பைக்ரா பகுதியில் சாலையின் நடுவே திடீரென்று 5 அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலை என்பதால் போக்குவரத்து காவலர்கள் சாலையின் நடுவே தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பள்ளம் காரணமாக சாலையில் கனரக வாகனங்கள் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டு வருவதாலும், மேலும் அந்த சாலையைக் கடக்கும் வாகனங்கள் மெதுவாகவே சென்று வருகிறதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
குறிப்பாக பள்ளம் ஏற்பட்டுள்ள இடத்திற்கு அருகில் தனியார் மருத்துவமனை உள்ளதால் அவசர சிகிச்சைக்கு ஆம்புலன்ஸ் வாகனம் வருவதற்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
அப்பகுதியில் உள்ள குடிநீர் குழாயில் விரிசல் ஏற்பட்டு, குழாயின் வழியே தண்ணீர் வெளியேறி மணல் அரிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என பலர் தெரிவிக்கின்றனர். மேலும், பள்ளம் ஏற்பட்டது தொடர்பாக தகவல் அளிக்கப்பட்டும் ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும், மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறையினர் பள்ளத்தை சரிசெய்வதற்க்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்துடனே கடந்துச் செல்கின்றனர்.
![sudden potholes in thiruparangunram road at madurai](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-mdu-02-sudden-ditch-ontheroad-script-visual_10122020162124_1012f_1607597484_536.png)
இந்த சாலையில் இதுபோன்ற திடீர் பள்ளம் ஏற்படுவது இது மூன்றாவது முறை என்று கூறப்படுகிறது. மக்களது அச்சத்தின் காரணமாக இப்பகுதியில் காவல்துறையினர் தொடர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.