உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வரம்புக்குள்பட்ட மதுரை, சிவகங்கை, விருதுநகர், நெல்லை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் சட்டவிரோத மணல் கொள்ளை நடைபெறுகிறது, இதனால் நிலத்தடி நீர் வெகுவாகக் குறைந்துவருகிறது. வேளாண்மை பாதிக்கப்படுகிறது.
அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுப்பணித் துறை மூலமாக நடத்தப்படும் அரசின் மணல் குவாரிகளில் ஆன்லைன் மூலம் புக்கிங் வசதி செய்துள்ளது.
இதனை இடைத்தரகர்கள், அரசு அலுவலர்களின் உதவியுடன் போலி முகவரி மூலம் பதிவுசெய்து அதிக விலைக்கு விற்கப்படுகிறார்கள். இதனால், மக்கள் ஆன்லைன் மூலம் புக்கிங் செய்ய முடிவதில்லை. பல தடவை முயற்சி செய்தும் ஆன்லைன் புக்கிங் என்பது சாத்தியமற்ற ஒன்றாக உள்ளது.
இடைத்தரகர்கள் மூலம் புக்கிங் செய்து விற்கப்படும் மணலின் விலை அதிகமாக உள்ளது எனவே மக்கள் ஆன்லைன் வழியில் புக்கிங் செய்து நியாயமான விலைக்கு மண் கிடைக்க உரிய வழிவகை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டன.
இந்த மனு இன்று நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் முன்னிலையான மூத்த வழக்கறிஞர் செல்லப்பாண்டியன், இரண்டு இடங்களில் அரசு பொதுப்பணித் துறை மூலம் மணல் விற்பனை செய்யப்படுகிறது. அதில் மக்கள் நேரடியாக ஆன்லைனில் புக்கிங் செய்து எடுத்துக் கொள்ளும் வசதி உள்ளது. தற்போது அது நடைமுறையில்தான் உள்ளது என்றார்.
இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் அரசு மணல் குவாரியிலிருந்து மணல் எடுக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவது தெரியும். ஆனால், அவை மக்களுக்கு என்ன விலையில் கிடைக்கிறது எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தற்போது மணலின் விலை 45 ஆயிரம் ரூபாய் என்று கூறப்படுகிறது.
தங்கத்தின் விலை அளவு தமிழ்நாட்டில் மணல் விற்கப்படுகிறது. மக்களுக்கு அரசின் விலையில் மணல் கிடைப்பதில்லை என்று கூறிய நீதிபதிகள், சாதாரண மக்களுக்கு அரசின் விலையில் மணல் கிடைக்கிறதா என்பதை உறுதிப்படுத்தி அறிக்கைத் தாக்கல்செய்ய உத்தரவிட்டு வழக்கு டிசம்பர் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தனர்.
இதையும் படிங்க: 'முறைகேடுகளில் ஈடுபடும் அரசு ஊழியர்களின் முழு சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட வேண்டும்'