மதுரை: இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருப்பவர் மதுரையைச் சேர்ந்த சச்சின் சிவா. இவர் சென்னையில் இருந்து மதுரைக்கு செல்வதற்காக நேற்று இரவு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் SETC பேருந்து எண்- TN 01 AN 3213 என்ற கழிப்பறை வசதியுடன் கூடிய பேருந்தில் பயணிப்பதற்காக ஏறியுள்ளார்.
அப்போது அந்த பேருந்தின் நடத்துனர் இந்த பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அனுமதி இல்லை எனக் கூறி பேருந்தில் ஏறக்கூடாது என கூறியுள்ளார். அப்போது பதிலளித்த சச்சின் சிவா இதுபோன்ற பேருந்துகளில் பயணிக்க அனுமதி உள்ளது என கூறியபோது மாற்றுத்திறனாளி சிவாவை பார்த்து "முகத்தை உடைத்து விடுவேன் எனக்கு எல்லாம் தெரியும்" என கூறி மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் இது குறித்து கேட்டபோது "அப்படித் தான் பேசுவேன் உன்னை வண்டியில் ஏற்ற முடியாது" எனக்கூறி வண்டியில் ஏற்றுவதற்கு மறுத்துள்ளார்.
இதனையடுத்து மாற்றுத்திறனாளி சச்சின் சிவா கோயம்பேடு பேருந்து நிறுத்தத்தில் அதே பேருந்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அந்த பகுதிக்கு வந்த நடத்துனர் "நீ என்ன வேண்டுமானாலும் செய்துக்கொள் என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது" என அலட்சியமாக பேசி மாற்றுத்திறனாளிக்கு மிரட்டல் விடுத்து சென்றுள்ளார்.அந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து மாற்றுத்திறனாளி சச்சின் சிவாவை பேருந்தில் ஏற்றாமலேயே அப்படியே விட்டுச் சென்றுள்ளார். மேலும் காவல்துறையினர் முன்பாகவே "நீ மதுரைக்கு வா பார்த்துக் கொள்ளலாம்" என கூறி பகிரங்கமாக மிரட்டல் விடுத்துவிட்டு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து மற்றொரு பேருந்தில் மிகுந்த சிரமத்துடன் சச்சின் சிவா பயணித்துள்ளார்.
இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியின் கேப்டனுக்கே இது போன்ற ஒரு நிலை ஏற்பட்டால் சாதாரண மாற்று திறனாளிகள் பார்வையற்றோருக்கு என்ன மாதிரியான நிலை அரசு பேருந்தில் ஏற்படும் என்ற கேள்வியை சமூக ஆர்வலர்கள் எழுப்புகின்றனர். இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் மேலும் இதுபோன்ற மாற்றுத்திறனாளிக்கு மிரட்டல் விடுத்து பேருந்தில் ஏற்ற மறுத்த நடத்துனர் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை சச்சின் சிவா விடுத்துள்ளார்.
இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனை அரசுப் பேருந்தில் ஏற்ற மறுத்த அரசுப் பேருந்து நடத்துனர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: IFS: ஐஎஃப்எஸ் லஞ்ச வழக்கில் பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி கபிலன் சஸ்பெண்ட்!