மதுரை: பாலமேட்டில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டுத் திருவிழா இன்று (ஜனவரி 15) கோலாகலமாக நடைபெற்றது. காலை 7.30 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை ஏழு சுற்றுகளாக நடைபெற்றது. 700 காளைகளும் 300 மாடுபிடி வீரர்களும் களமிறங்கி தங்களின் வீரத்தை வெளிப்படுத்தினர்.
இந்தப் போட்டியில் மதுரை மாவட்டம் பொதும்பு கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் சிறந்த மாடுபிடி வீரராகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். அவருக்கு இருசக்கர வாகனம் முதல் பரிசாக வழங்கப்பட்டது. இவர் 21 காளைகளை அடக்கி முன்னணி வீரராகத் திகழ்ந்தார். 11 காளைகளைப் பிடித்த குருவி துறையைச் சேர்ந்த கார்த்திக் ராஜா இரண்டாமிடம் பெற்றார். மதுரை மாவட்டம் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் ராஜா மூன்றாம் இடம்பெற்றார்.
முதலிடம் பெற்ற பிரபாகரன் 2020ஆம் ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டிலும் சிறந்த வீரராகத் தேர்வுபெற்று காரைப் பரிசாகப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று சிறப்பாக விளையாடிய சிவகங்கை மாவட்டம் புலியூரைச் சேர்ந்த சூறாவளி காளை முதல் பரிசை வென்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சார்பாக இந்தக் காளைக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. மதுரை மேலமடையைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரின் காளை இரண்டாவது பரிசை வென்றது. இதனிடையே காளைகள் முட்டியதில் 36 வீரர்கள் காயம் அடைந்தனர்.
இதையும் படிங்க : தமிழ்நாடு அரசின் காமராசர் விருதுக்கு குமரி அனந்தன் தேர்வு!