மதுரை: ராமநாதபுரத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழ்நாட்டில் சிலைகளை அவமரியாதை செய்வது, உடைப்பது போன்றவை காரணமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. சிலைகளை அமைப்பதற்கும், பாதுகாப்பு வழங்குவதற்கும் அரசு ஏராளமான தொகையை செலவிடுகிறது.
இந்நிலையில், மதுரை ஆனையூரில் பெரும்பிடுகு முத்தரையர் சிலையை வைக்க தமிழ்நாடு உள்துறைச் செயலர் அனுமதி வழங்கியுள்ளார். அவர் சாதிய வழியிலான தலைவர் என்பதால் அப்பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஆகவே இவற்றை கருத்தில் கொண்டு ஆனையூர் பகுதியில் பெரும்பிடுகு முத்தரையர் சிலையை வைக்க அனுமதி வழங்கக்கூடாது என உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், சென்ற மார்ச் 19ஆம் தேதி சிலை திறக்கப்பட்டுவிட்டதால் இந்த வழக்கில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க இயலாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: நீர் மேலாண்மைக்கும் சுற்றுச்சூழலுக்கும் முக்கியத்துவம்: திமுக எம்.எல்.ஏ தமிழரசி