மதுரை: ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா, பிகார், மேற்கு வங்கம், கேரளா, ஒடிசா, ஜார்க்கண்ட் மற்றும் குஜராத் ஆகிய 11 மாநிலங்களில் இன்று பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட ஒன்பது ரயில்கள், போக்குவரத்து இணைப்பை அதிகரிக்க உதவும். இந்த வந்தே பாரத் ரயில்கள் அவற்றின் இயக்கப்படும் வழித்தடங்களில் அதிவேக ரயிலாக இருப்பதோடு, பயணிகளின் கணிசமான நேரத்தை மிச்சப்படுத்தவும் உதகின்றது.
அந்த வகையில், இன்று (செப்.24) நெல்லையிலிருந்து புறப்பட்ட வந்தே பாரத் ரயில் பிற்பகல் 2.30 மணி அளவில் மதுரை வந்து சேர்ந்தது. அப்போது ரயில் ஆர்வலர்களும், பொதுமக்களும் வந்தே பாரத் ரயிலை வரவேற்று, கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர். இன்று மதியம் சென்னை செல்வதற்காக நெல்லையில் துவக்கி வைக்கப்பட்ட வந்தே பாரத் ரயிலில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் பயணம் செய்தனர்.
இந்நிலையில், மதுரை ரயில் நிலையம் வந்தடைந்த வந்தே பாரத் ரயிலுக்கு, பாஜக சார்பில் மேளதாளங்களுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மற்றும் தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மதுரை மேயர் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். தொடர்ந்து, அவர்கள் மதுரையில் இருந்து கொடியசைத்து வந்தே பாரத் ரயிலை துவக்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் வந்தே பாரத் ரயில் போன்று கேக் வடிவமைக்கப்பட்டு வெட்டப்பட்டது. தொடர்ந்து தமிழிசை சௌந்தரராஜன் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு கேக் ஊட்டிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து மதுரையில் தமிழிசை செளந்திரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது பேசிய அவர், "இரண்டு வந்தே பாரத் ரயில்கள் சென்னையில் இருந்தும், ஒரு ரயில் தென்பகுதிக்கும் விடப்பட்டுள்ளது. தமிழகத்தைப் புறக்கணிக்கிறார்கள். தமிழக மக்கள் மீது அக்கறை இல்லை என்பதை மக்கள் யாரும் நம்ப வேண்டாம். பிரதமர், தமிழகத்தின் மீது அன்பு கொண்டுள்ளார்.
வந்தே பாரத் ரயிலில் பயணம் மேற்கொண்ட அனுபவம் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. குழந்தைகள் ஆர்வத்துடன் தங்களது பயணக் குறிப்புகளை என்னிடம் உற்சாகமாகப் பகிர்ந்து கொண்டது கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது. சாதாரண குடிமகளாக, தமிழகத்தின் மகளாக வந்தே பாரத் ரயிலில் மக்களோடு மக்களாக வந்தேன். வந்தே பாரத் ரயிலில் பயணித்த மக்களின் மகிழ்ச்சியை பாரத பிரதமரிடம் சமர்ப்பிக்க உள்ளேன்" எனத் தெரிவித்தார்.
மேலும், இது குறித்து ரயில்வே வாரியம் கூறியதாவது, “இந்த புதிய வந்தே பாரத் ரயில்கள் நாட்டின் முக்கிய நகரங்களின் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதற்கும், ரயில் பயணிகளுக்கு உலகத் தரம் வாய்ந்த வசதிகளை வழங்குவதற்கும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு படி” என தெரிவித்தனர்.
இதையும் படிங்க: நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கியது.. பொதுமக்கள் உற்சாக வரவேற்பு!