மதுரை மாவட்டம் ஆண்டார் கொட்டாரம் அருகே உள்ளது எல்கேபி நகர். இங்கு பல்லாண்டு காலமாக சாட்டையடி சமூகத்தைச் சேர்ந்த 500 குடும்பங்கள் வசித்து வருகின்றன. தெருவில் மக்கள் கூடும் இடங்களில் சாட்டையால் தங்கள் உடம்பை அடித்துக்கொண்டு கையேந்தி பிச்சை எடுத்து வாழ்கின்ற இந்த மக்கள் அந்த அவல நிலையிலும்கூட தங்களது குழந்தைகளைப் படிக்க வைத்து சமூகத்தில் மற்றவர்களைப் போல அவர்களும் வளர வேண்டும் என்ற எண்ணத்தில் படிக்க வைக்கின்றனர்.
ஒருகாலத்தில் நாடோடியாய் வாழ்ந்த இவர்களுக்கு, ஓர் இடத்தில் நிலையாய் வாழ்வதற்கு தேவையான வீடு, பள்ளி, ரேஷன் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தமிழ்நாடு அரசு செய்து கொடுத்துள்ளது. ஆனாலும் இவர்களுக்கு சாதி சான்றிதழ் இல்லாத காரணத்தால் மேற்கொண்டு படிப்பதற்கு அல்லது வேலைக்குச் செல்வதற்கு இயலாத நிலை உள்ளது.
இதுகுறித்து அச்சமூகத்தைச் சேர்ந்த பெரியவர் சின்னகண்ணு கூறுகையில், கடந்த 30 ஆண்டுகளாக இங்கே குடியிருந்து வருகிறோம். ரேஷன் கார்டு ஆதார் கார்டு வாக்காளர் அடையாள அட்டை அனைத்தும் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. ஆனால் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த சாதி சான்றிதழ் இதுவரை வழங்கப்படவில்லை.
அப்படிப்பட்ட அவலமான நிலையிலும்கூட எங்களது குழந்தைகள் படிப்பில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறார்கள். தற்போதைய மதுரை மாவட்ட ஆட்சியர் வினய், எங்களது பிரச்சனையை கனிவோடு அணுகியுள்ளார் ஆகையால் விரைவில் தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம்" என்றார் .
தெருவில் சாட்டை எடுத்து தங்கள் உடம்பில் ரத்தம் வருகின்ற அளவிற்கு அடித்து பிச்சை எடுத்து வாழ்கின்ற இந்த மக்களின் குழந்தைகளும் அதே தொழிலுக்குள் தள்ளப்பட்டு விடக்கூடாது என்பதில் மிகுந்த கவனம் கொண்டு இருக்கிறார்கள் ஆனாலும் அதிகாரிகள் ரூபத்தில் விதி இவர்களின் வாழ்க்கையில் விளையாடி கொண்டுதான் இருக்கிறது
அதே ஊரைச் சேர்ந்த ராமாயி கூறுகையில், கர்நாடகா மற்றும் ஆந்திரப் பகுதியிலிருந்து நாடோடியாக திரிந்த நாங்கள் தமிழ்நாட்டிற்கு வந்து குடியேறியுள்ளோம். நாடோடியாக வாழ்ந்து திரிந்த எங்களுக்கு சாதி சான்றிதழ் என்றால் என்னவென்றுகூட தெரியாது.
ஆனால் பிள்ளைகளைப் படிக்க வைத்த பிறகு அதன் தேவையை உணர்கிறோம். நாங்கள் ஆவலோடு படிக்க வைத்த எங்கள் குழந்தைகளும் ஒரு கட்டத்திற்குப் பிறகு இந்த சாதி சான்றிதழ் இல்லாத காரணத்தால் மீண்டும் எங்களது தொழிலுக்கே வந்துவிட்டார்கள் என்று வேதனைப்படுகிறார்.
சாட்டையடி சமூகத்தின் தலைவர் எல்லப்பன் கூறுகையில், எல்லா சலுகையும் இருக்கிறது படிக்க வையுங்கள் என்று சொன்ன அதிகாரிகள்தான் இன்று சாதிச் சான்றிதழ் கொடுக்க மறுக்கிறார்கள். பள்ளி கல்லூரி பட்டப்படிப்பு மேற்படிப்பு என்று படித்துவிட்டு தெருவுக்குள் சும்மா திரிகின்ற எங்களது பிள்ளைகளை பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. பட்டா ரேஷன் கார்டு ஆதார் கார்டு எல்லாவற்றையும் அரசாங்கத்திடமே திரும்ப ஒப்படைத்து விட்டு நாங்கள் எங்களது நாடோடி வாழ்க்கையை திரும்ப தொடரலாம் என்பதுதான் எங்களது முடிவாக உள்ளது என்று குமுறினார்
இங்குள்ள குழந்தைகளில் 60க்கும் மேற்பட்டோர் தற்போது பள்ளிக்கூடம் சென்று படித்து வருகிறார்கள் அவர்களிடமும் சாதி சான்றிதழ் கேட்கப்பட்டு வருகிறது அதில் சரிபாதி குழந்தைகள் தற்போது சாட்டையடி தொழிலில் பெற்றோர்களுக்கு உதவியாக திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
இத்தனை இக்கட்டான சூழ்நிலையிலும்கூட இளங்கலை வரலாறு முடித்துவிட்டு முதுகலை வரலாறு படிப்பதற்கு திட்டமிட்டு வரும் ஆனந்தன் என்ற மாணவர் பேசுகையில், நாங்கள் படிப்பதற்கு டாக்டர் ராமச்சந்திரன் என்ற ஒரு சமூக ஆர்வலர்தான் பேருதவி செய்தார். அவர் உதவி இல்லாவிட்டால் நாங்கள் இந்த அளவிற்கு வந்திருக்க முடியாது. பள்ளி கல்லூரிகளில் எங்களோடு படிக்கும் சக மாணவர்கள் கல்வி உதவி தொகையை பெற்று அதனை கட்டணமாக கட்டுவார்கள் அதையெல்லாம் பெறுவதற்கு கூட எங்களுக்கு எந்தவித வாய்ப்பும் இல்லாமல் போய்விட்டது.
என்னுடைய சமூகத்தைச் சார்ந்த இளம் குழந்தைகள் மீண்டும் இந்த தொழிலுக்கு சென்று விடக்கூடாது என்பதில் நான் கவனமாக இருக்கிறேன் அதற்காக நாங்கள் படித்த மாணவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இங்கே அவர்களுக்கு மாலைநேர வகுப்பு எடுக்கிறோம். ஆனால், இந்த சாதி சான்றிதழ் காரணமாக மீண்டும் அவர்கள் சாட்டையடி தொழிலுக்கே திரும்பும் நிலை ஏற்படும் வாய்ப்பு உள்ளது ஆகையால் மதுரை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அலுவலர்கள் தலையிட்டு எங்களது எதிர்காலத்தை காப்பாற்ற வேண்டும் என்றார்.
தற்போது பட்டப்படிப்பு படித்துள்ள ஆனந்தன், படையப்பா, ஈஸ்வரி மற்றும் காந்தி ஆகியோர் தங்களுக்கும் தங்களின் சமூக குழந்தைகளுக்கும் நல்லது நடக்கும் என்ற எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள். அரசாங்கம் தருகின்ற ஒரே ஒரு சான்றிதழில் இவர்களின் வாழ்வாதாரம் இருக்கிறது.
இதையும் படிங்க: கார்ப்பரேட் நலனுக்காக இந்திய கடல்வளத்தை சீரழிக்க உதவும் சட்டம் - நாடாளுமன்றத்தில் சு. வெங்கடேசன் பேச்சு