நாகர்கோவில் கோட்டாரைச் சேர்ந்த 15 வயது சிறுமி இளைஞர் ஒருவருடன் சில நாட்களுக்கு முன்பாக மாயமானார். அது தொடர்பாக பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் இருவரையும் மீட்டு விசாரித்தனர்.
அப்போது சிறுமி, கடந்த சில ஆண்டுகளாக தனது தாயாரின் ஒப்புதலுடன் பலர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக குறிப்பிட்டிருந்தார். அது தொடர்பாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் உள்ளிட்ட பலர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் பிணை கோரி நாகர்கோவிலைச் சேர்ந்த நாஞ்சில் முருகேசன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், "2017ஆம் ஆண்டு முதல் பாலியல் வன்கொடுமை செய்ததாக குறிப்பிடும் நிலையில் அப்போதெல்லாம் எவ்வித புகாரும் அளிக்கப்படவில்லை. ஏதோ உள்நோக்கத்துடன் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புனையப்பட்ட வழக்காக உள்ளது. இந்த வழக்கில் பிணை கோரி நாகர்கோவில் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பிணை வழங்கினால் சாட்சிகளை கலைப்பது, தலைமறைவாவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டேன். ஆகவே, இந்த வழக்கில் பிணை வழங்க உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பாரதிதாசன், வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.