மேலவளவு பஞ்சாயத்து தலைவர் முருகேசன் உட்பட 7 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி சிறையில் இருந்த 13 பேர் முன்கூட்டியே விடுதலையானதில் ஆவணங்களை தாக்கல் செய்து, உள்துறை அலுவலர்கள் நேரில் ஆஜராகக் கூறிய வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
சிறைத்துறை டி.ஐ.ஜி, எஸ்.பி., அரசு அலுவலர்கள் ஆஜராகி இருந்தனர். கொலை வழக்கில் கைதானவர்களின் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ள நிலையில் தமிழ்நாடு அரசு ஒரு அரசாணை மூலம் விடுவித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது என நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தனர்.
சிறைத்துறை அலுவலர்கள் ஆஜராகி 13 பேர் விடுவிக்கப்பட்ட அரசாணையை தாக்கல் செய்தனர். இந்த அரசாணையை எதிர்த்து தாமாகவே முன்வந்து நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த வெங்கடேஷ் அமர்வு வழக்காக எடுத்து விசாரித்தனர்.
இந்த வழக்கில் கொலையாளிகள் தண்டிக்கப்பட்டுள்ள நிலையிலும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல் முறையீடு செய்யாதது ஏன் எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
13 பேர் விடுதலை செய்யப்பட்ட அரசாணை எதன் அடிப்படையில் பிறப்பிக்கப்பட்டது என தமிழ்நாடு அரசு பதிலளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த வெங்கடேஷ் அமர்வு விசாரணையை நவம்பர் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
இதையும் படிங்க: நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம்!