மயிலாடுதுறை: சோழம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த சுடர்மணி என்பவரின் மனைவி சத்யா (31). இவர் கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி மயிலாடுதுறை காமராஜர் பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்தில் ஏறும்போது, அவர் கைப்பையில் வைத்திருந்த தங்க நகைகள் காணமால் போயுள்ளது.
பின்னர், இது குறித்து சத்யா போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதனை அடுத்து, பேருந்து நிலையம் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்ததில், சம்பந்தப்பட்ட பேருந்து, மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் வந்து நின்றபோது, அனைவரும் பேருந்தில் ஏற முயலும்போது, ஒரு பெண் மட்டும் தன் குழந்தையுடன் சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் பேருந்தில் இருந்து இறங்குவது தெரிய வந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, அதற்கு முந்தைய சிசிடிவி பதிவுகளைப் பார்த்தபோது சம்பந்தப்பட்ட பெண் 30-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் ஏறி இறங்குவது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, அந்தப் பெண் குறித்த விபரங்களை சேகரித்தபோது, அந்தப் பெண் உள்ளிட்ட சிலர் ஆந்திர மாநிலத்தில் இருந்து ஒரு குழுவாக வந்து, கடலூர் மாவட்டம் முட்லூர் பகுதியில் தங்கியிருப்பது தெரிய வந்துள்ள்ளது.
இதையடுத்து அங்கு சென்ற போலீசார், தொடர்ந்து அந்த பெண்ணைத் தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று அந்தப் பெண் சம்பவ இடத்தில் அணிந்திருந்த அதே உடையுடன் சாலை ஓரம் அமர்ந்திருந்ததைக் கண்ட போலீசார் அவரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அந்தப் பெண் ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள முள்ளுக்குடி என்ற கிராமத்தைச் சேர்ந்த ராஜு என்பவரின் மனைவி துர்கா (25) என்பதும், ஆந்திராவில் இருந்து ஒரு குழுவாக வந்து தங்கி திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதும் தெரிய வந்துள்ளது.
மேலும், சத்யாவின் கைப்பையில் வைத்திருந்த 18 சவரன் நகைகளைத் திருடிய துர்கா உடனடியாக அந்த நகைகளைத் தனது சகோதரியிடம் கொடுத்து, ஆந்திராவில் உள்ள தனது சொந்த ஊருக்கு அனுப்பி விட்டுள்ளார். இதை அடுத்து போலீசார் துர்காவை கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் செல்வம் தலைமையில் உதவி ஆய்வாளர் இளையராஜா உள்ளிட்ட 8 பேர் கொண்ட தனிப்படை போலீசார், துர்காவின் சகோதரியின் செல்போன் சிக்னலை பின்தொடர்ந்து துர்காவின் சொந்த ஊருக்குச் சென்றனர். அங்கு, போலீசாரின் நடமாட்டத்தை உணர்ந்து தப்பி ஓட முயன்ற துர்காவின் சகோதரியை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் வீட்டுக்கு சிறிது தூரத்தில், மண்ணில் பள்ளம் தோண்டி பதுக்கி வைத்திருந்த தங்க நகைகளை துர்காவின் சகோதரி போலீசாரிடம் ஒப்படைத்தார். இதனிடையே, மயிலாடுதுறையில் திருட்டு போன நகைகளை போலீசார் தனிப்படை அமைத்து ஆந்திராவில் மீட்டது அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: வந்தே பாரத் ரயிலில் இருந்து தவறி விழுந்து முதியவர் பலியான விவகாரம்... சிசிடிவி காட்சியில் சிக்கிய ரயில்வே ஊழியர்கள்! அவசரகால கதவால் வந்த சோதனை!