மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மையிட்டான்பட்டி ஊராட்சியில் வார்டு உறுப்பினருக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பாண்டியம்மாள். இவரது கணவர் ஞானசேகரன் தனது உறவினர்கள் திருமங்கலத்தைச் சேர்ந்த ஆறுமுகம், சென்னையைச் சேர்ந்த சேகர் ஆகியோருடன் வீட்டு வாசலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்துள்ளனர்.
அப்போது மூன்று கார்களில் வந்த 15க்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத கும்பல், அவர்களை அரிவாள், அம்புகளால் சரமாரியாகத் தாக்கினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் படுகாயமடைந்த மூன்று பேர் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக அவர்கள் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து கள்ளிக்குடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பாண்டியம்மாள் வெற்றி பெற்றதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் எதிர்தரப்பினர் கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்களா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: இரு வேட்பாளர்கள் இடையே மோதல்: வெளியான வீடியோ காட்சி!