மதுரையைச் சேர்ந்த சித்த மருத்துவர் எஸ்.சுப்பிரமணியன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், கரோனா வைரஸை கட்டுப்படுத்த 66 மூலிகைகள் கொண்டு கசாய பொடி மருந்தை கண்டுபிடித்துள்ளேன்.
இந்தப் பவுடரை தண்ணீரில் கொதிக்க வைத்து தினமும் இரு வேளை சாப்பிடுவதற்கு முன்பு குடித்து வந்தால் கரோனா நோயிலிருந்து விடுபடலாம். பொடி மருந்தை நுண்ணுயிர் ஆய்வுக்கு உட்படுத்தக்கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அளித்தேன். இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. எனவே கரோனா நோயை குணப்படுத்தும் சித்த மருந்தான மூலிகை பொடியை நுண்ணுயிர் ஆய்வுக்கு உட்படுத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில், கரோனா பாதிப்புக்குளான மக்களுக்கு யுனானி, ஹோமியோபதி மருந்துகளை கொடுத்துவருகிறோம். புதிய மருந்து கண்டுபிடிப்புகள் குறித்து இதுவரை 35 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன என தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், சென்னையில் உள்ள இந்திய மருத்துவ மற்றும் ஹோமியோபதி இயக்குனரிடம் ஜூன் 26ஆம் தேதி சித்த மருத்துவர் கண்டுபிடித்துள்ள மருந்துடைய ஆவணங்களுடன் நேரில் சென்று ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.பின்னர், நிபுணர் குழு அமைத்து புதிய மருந்தை ஆய்வு செய்து, அதுகுறித்த அறிக்கையை ஜூன் 30ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஜூன்30ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.