இது குறித்து தென்னக ரயில்வேயின் மதுரை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
லெவல் கிராசிங் என்பது சாலையும் ரயில் பாதையும் இணையும் சந்திப்பு ஆகும். ஓடும் ரயில்களை திடீரென சடன் பிரேக் போட்டு நிறுத்துவது சாத்தியம் இல்லாததால் சாலை வாகனங்கள் நின்று போகும் படி ரயில்வே லெவல் கிராசிங்குகளில் கதவுகள் (Gates) அமைக்கப்படுகின்றன.


நாளொன்றுக்கு ஒரு லட்சம் வாகனங்களுக்கு மேல் கடக்கும் லெவல் கிராசிங்குகள் உள்ள இடங்களில் ரயில்வே மேம்பாலங்கள் அமைக்கப்படுகின்றன. மதுரை கோட்டத்தில் தற்போது 94 ரயில்வே மேம்பாலங்கள் உள்ளன. மேலும் 61 லெவல் கிராசிங்குகள் இருக்கும் இடங்களில் ரயில்வே மேம்பால பணிகள் நடைபெற்று வருகின்றன.
ரயில் விபத்துகளைத் தவிர்க்கவும், ரயில்களை வேகமாக இயக்கவும் லெவல் கிராசிங்குகளில் ரயில்வே கேட்டுகள், சுரங்கப்பாதைகள், மேம்பாலங்கள் ஆகியவை அமைக்கப்படுகின்றன.

ரயில்கள் வேகமாக இயக்கப்படுவதால் ரயில்வே லெவல் கிராஸிங் கேட்டுகளில் சாலை வாகன ஓட்டிகள் பொறுமையுடன் செயல்பட்டு விபத்துகளை தவிர்க்க உதவும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
