மதுரை: திண்டுக்கல்லில் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட தனியார் கல்லூரித் தாளாளர் ஜோதி முருகனுக்கு பிணை வழங்கப்பட்டதைக் கண்டித்தும், பிணையை ரத்துசெய்ய வலியுறுத்தியும், திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு ஜனநாயாக மாதர் சங்கத்தினர், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே. பாலபாரதி தலைமையில் கடந்த 6ஆம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மோதல்
அப்போது வழக்கறிஞர் தேவேந்திரன் என்பவருக்கும், மாதர் சங்கத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனிடையே, தன்னைத் தாக்க முயன்றதாக தேவேந்திரன் தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில், கே. பாலபாரதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ராணி, வனஜா, ஆண்டாள் அம்மாள், ஜோதி பாசு, அரபு முகமது உள்ளிட்ட 27 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
முன்பிணை
இந்த வழக்கில் முன்பிணை கோரி பாலபாரதி, ஜானகி உள்ளிட்ட ஆறு பேர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல்செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளங்கோவன், நீதிமன்றத்திற்கு முன்பாகவோ, நீதிமன்ற வளாகத்திலோ இதுபோல் போராட்டத்தில் ஈடுபட மாட்டோம் என பாலபாரதி, முன்பிணைக் கோரியோர் தரப்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல்செய்ய உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். அதுவரை ஆறு பேரை கைதுசெய்ய இடைக்காலத் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:ஆற்றில் கவிழ்ந்த பேருந்து: 8 பேர் உயிரிழப்பு