மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றக்கோரி இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 100 பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
மதுரை திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள கைலாசநாதர் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றும் இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றக்கோரி உயர் நீதிமன்றத்தில் இந்து முன்னணி சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. இதனையடுத்து மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதியளிக்கப்பட்டது.
ஆனால் காவல் துறை திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள சிக்கந்தர் பாவா பள்ளிவாசல் இருப்பதால் சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்படும் எனக் கூறி பல வருடங்களாக திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள சித்தி விநாயகர் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றிவருகின்றனர்.
இதனிடையே, இது ஆகம விதிகளுக்கு முற்றிலும் முரணானது எனக் கூறி இந்து முன்னணியினர் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். கார்த்திகை தீபம் மலை மேல் உள்ள கைலாசநாதர் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்ற இந்து முன்னணியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையர் சிவராஜ் பிள்ளை தலைமையில் மூன்று உதவி ஆணையர்கள் 12 ஆய்வாளர்கள், 25 சார்பு ஆய்வாளர்கள், உள்ளிட்ட 250 காவல் துறையினர் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வஜ்ரா வாகனமும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து காடேஸ்வரன் சுப்பிரமணியத்தை காவல் துறையினர் கைதுசெய்தனர்.
இதையும் படிங்க: 3 ஐஏஎஸ் அலுவலர்களை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு