புதுக்கோட்டையைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் புதுக்கோட்டை கண்ணனூர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் மத்திய மாநில அரசுகளின் தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு அவற்றில் ஏதேனும் தொல்லியல் எச்சங்கள் உள்ளதா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
மேலும், கண்ணனூர் வனப்பகுதியில் வனத் துறையினரால் அகற்றப்பட்ட நடுகற்கள் உள்ளிட்ட பழம்பொருட்களை மீண்டும் அதே இடத்தில் வைக்க வனத் துறையினருக்கு உத்தரவிடப்பட்டது.
கலாசாரத்தையும் பண்பாட்டையும் காக்க தமிழர்கள் தவறிவிடுகின்றனர். தமிழர்கள் பழமையான பாரம்பரியத்தைக் கொண்டிருப்பினும், அதன் பெருமையை உணராமல் பாரம்பரிய சின்னங்களை பாதுகாக்க தொடர்ந்து தவறி வருகிறோம் என நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.