மதுரை ரயில் நிலைய மேற்கு நுழைவுவாயில் பகுதியில் செயல்பட்டு வரும் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
கடந்த வாரம் அலுவலகத்தில் பணியாற்றும் தெற்கு ரயில்வே ஊழியர் சங்கத்தைச்சேர்ந்த தொழிற்சங்க நிர்வாகி, பணி இடமாற்றம் தொடர்பாக, தொழிலாளர் நலத்துறை அலுவலரை சந்தித்துப் பேசினார்.
பின்னர், அங்கிருந்த மற்றொரு ரயில்வே தொழிற்சங்க நிர்வாகிகள் எதிர்ப்புத்தெரிவித்தனர். இதனையடுத்து ஏற்பட்ட கருத்து வேறுபாடு வாய்த்தகராறாக ஏற்பட்டு, பின்னர் ரயில்வே ஊழியர்கள் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளும் அளவிற்கு மோதலாக மாறியது.
இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் சார்பில் இருதரப்பு இடையே விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் தகராறில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ரயில்வே ஊழியர்கள் நான்கு பேரை பணியிடை நீக்கம் செய்து ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: சத்தீஸ்கர் தேநீர் கடை தகராறு - வகுப்புவாத சண்டையா?