மதுரை:Building Collapse: கீழவெளிவீதி பகுதியில் உள்ள பழமையான கட்டடம் இடிந்த விபத்தில் காவலர்கள் சரவணன், கண்ணன் ஆகியோர் சிக்கினர்.
இதில் காவலர் சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த காவலர் கண்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகிறார்.
கட்டட விபத்தில் உயிரிழந்த காவலர் சரவணனின் உடல் மதுரை காவலர் குடியிருப்பில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
நேரில் வந்து அஞ்சலி செலுத்திய டிஜிபி
டிஜிபி சைலேந்திரபாபு காவலர் சரவணனின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, தென்மண்டல ஐஜி அன்பு, மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன், சட்டப்பேரவை உறுப்பினர் பூமிநாதன், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இதனையடுத்து டிஜிபி சைலேந்திரபாபு சம்பவம் நடைபெற்ற பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், சிகிச்சையில் உள்ள காவலர் கண்ணன் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த டிஜிபி சைலேந்திரபாபு, "இரவு ரோந்துப் பணியின் போது கட்டட விபத்தில் உயிரிழந்த தலைமைக் காவலர் சரவணனின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
சரவணனின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிதியுதவியும், அரசுப் பணியும், கண்ணனின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவியும் அறிவித்த முதலமைச்சருக்கு நன்றி. காவலர் கண்ணன் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன்.
மதுரை நகரில் பழமையான கட்டடங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இனி இதுபோன்ற நிகழ்வு நடக்காமல் தடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கட்டடம் இடிந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது" என்றார்.
இதையும் படிங்க: கொடைக்கானலில் சிறுமி சந்தேகத்திற்குரிய வகையில் மரணம்: நீதி கேட்டு வலுக்கும் போராட்டம்