மதுரை: ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்ற வழக்கறிஞர் கடந்த 12ஆம் தேதியன்று தமிழ்நாடு ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்த மனுவில், ’கடந்த 2016-2021ஆம் ஆண்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவையில் வருவாய்த்துறை அமைச்சராகப் பதவியில் இருந்த ஆர்.பி.உதயகுமார் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி அதிகளவிற்கு சொத்து குவித்துள்ளதாகவும், மேலும் தனக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர் மூலமாக பல கோடி ரூபாய் வருமானம் ஈட்டியதாகவும், அம்மா ட்ரஸ்ட் என்ற தொண்டு நிறுவனம் மூலமாக பொதுமக்களுக்கு பரிசுப்பொருட்களை வழங்கி முறைகேடு செய்துள்ளதாகவும்’ குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் தினேஷின் புகார் குறித்து விசாரணை நடத்துவதற்காக லஞ்ச ஒழிப்புத்துகையில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் புகார்தாரரான வழக்கறிஞர் தினேஷ் இன்று(ஜூலை27) மதுரை அழகர்கோவில் சாலைப் பகுதியில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் குறித்த விசாரணைக்காக வந்தார்.
இதனையடுத்து புகார்தாரர் வழக்கறிஞர் தினேஷிடம் லஞ்ச ஒழிப்புத்துறை துணைகண்காணிப்பாளர் புகார்தன்மை குறித்தும், புகாரில் குறிப்பிட்டுள்ள ஆவணங்கள் குறித்தும் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த வழக்கறிஞர் தினேஷ், 'ஆர்.பி.உதயகுமார் பதவியில் இருந்தபோது அம்மா ட்ரஸ்ட் என்ற பெயரில் பொதுமக்களுக்கு சைக்கிள் உள்ளிட்டப் பரிசுபொருட்களை வழங்கி முறைகேடு செய்துள்ளார். தேர்தல் நேரத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்களில் அதிகளவிற்கான வருமானத்தை காட்டியுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு அளித்தப் புகாரில் தெரிவித்தேன்’ என்றார்.
இதையும் படிங்க:'காலை உணவு வழங்கும் திட்டத்தில் கையெழுத்திட்டபின் கிடைத்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை' - முதலமைச்சர் பெருமிதம்!