மதுரை விமான நிலைய சரக்கு முனைய பகுதியில் சென்னை செல்லும் ஏர் இந்தியா விமானத்திற்கான பார்சல்கள் ஸ்கேனர் கருவி மூலம் சோதனை செய்யப்பட்டது.
அதில் நாகர்கோவில், கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு அனுப்பப்பட்ட பார்சலில் பார்ட்ஸ் வயர் இணைப்புடன் காணப்பட்டதால் வெடிகுண்டு என ஊழியர்கள் சந்தேகப்பட்டு உயர் அலுவலர்களுக்குத் தகவல் தெரிவித்தனர்.
தொடர்ந்து மத்தியப் பாதுகாப்புப் படை, மாவட்ட காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வெடிகுண்டு தடுப்புப் பிரிவு ஊழியர்கள் கன்னியாகுமரியிலிருந்து வந்த நான்கு பார்சல்களையும் பாதுகாப்பான பையில் வைத்து விமான நிலையத்திற்கு வெளியே பாதுகாப்பான இடத்திற்கு கொண்டுசென்றனர்.
வெடிகுண்டு தடுப்பு காவல் துறையினரின் தீவிர சோதனைக்குப் பின் பார்சலைப் பிரித்து பார்த்தபோது அதில் இட்லி பொடி, மசாலா பொடி ஆகியவற்றுடன் செல்போன் சார்ஜர் இணைக்கப்பட்டிருந்தது.
இதனால்தான் பார்சலில் டெட்டனேட்டர் இருக்குமோ எனச் சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து, முழு சோதனைக்குப் பிறகு வெடிகுண்டு இல்லை என உறுதிசெய்து, பார்சல்களை மீண்டும் அஞ்சல் துறையிடம் ஒப்படைத்தனர். இதனால் மூன்று மணி நேரம் விமான நிலைய வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: 11 மாவட்ட கல்வி அலுவலர்கள் பணியிட மாறுதல்