பிகார் மாநிலம் காக்கரையரிலுள்ள பெல்டார் பகுதியைச் சேர்ந்தவர் அனுப் சவுத்ரி. இவரது மகன் ராஜேந்திர சவுத்ரி (60). திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூரில் நிகழ்ந்த ஒரு கொலை சம்பவம் காரணமாக கடந்த மாதம் ஆயுள் தண்டனை பெற்று மதுரை மத்திய சிறையில் நவம்பர் 12ஆம் தேதி அடைக்கப்பட்டார்.
சிறைவாசத்தின்போது தொடர் வயிற்றுப்போக்கு, வாந்தி காரணமாக மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் டிசம்பர் 1ஆம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சவுத்ரியின் உடல்நிலை மேலும் மோசமடைந்து இன்று (டிசம்பர் 21) காலை சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையிலேயே அவர் உயிரிழந்தார்.
இது தொடர்பாக அரசு இராசாசி மருத்துவமனை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.