நாகர்கோவில் கோட்டாரைச் சேர்ந்த 15 வயது சிறுமி இளைஞர் ஒருவருடன் சில நாள்களுக்கு முன்பாக மாயமானார். அது தொடர்பாக பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் இருவரையும் மீட்டு விசாரித்தனர்.
அப்போது சிறுமி, கடந்த சில ஆண்டுகளாக தனது தாயாரின் ஒப்புதலுடன் பலர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக குறிப்பிட்டிருந்தார். அது தொடர்பாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் உள்ளிட்ட பலர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு கைதுசெய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் பிணை கோரி நாகர்கோவிலைச் சேர்ந்த நாஞ்சில் முருகேசன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், "2017ஆம் ஆண்டு முதல் பாலியல் வன்கொடுமை செய்ததாக குறிப்பிடும் நிலையில் அப்போதெல்லாம் எவ்வித புகாரும் அளிக்கப்படவில்லை. ஏதோ உள்நோக்கத்துடன் இந்த வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. புனையப்பட்ட வழக்காக உள்ளது.
இந்த வழக்கில் பிணை கோரி நாகர்கோவில் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல்செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பிணை வழங்கினால் சாட்சிகளைக் களைப்பது, தலைமறைவாவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டேன். ஆகவே, இந்த வழக்கில் பிணை வழங்க உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கானது இன்று (அக். 06) நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. மேலும் மனுதாரர் தரப்பில் பிணை கோரிய மனுவை திரும்ப பெற்றுக் கொண்டதால் மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
ஏற்கனவே இவருடைய பிணை மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்த நிலையில் மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அதிமுக முதலமைச்சர் வேட்பாளர்: சுமுக முடிவை எட்ட அமைச்சர்கள் தீவிர முயற்சி