மதுரை: மத்திய சிறையில் தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறைக்கைதிகள் உள்ளனர். ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் தனித்தனி சிறைகள் இங்கே உள்ளன.
ஆறு மாதங்களுக்குப் பின் உறவினர்கள் வருகை
இந்நிலையில் 6 மாதத்திற்குப் பிறகு இன்று (ஆக.17) சிறைக்கைதிகளை சந்திக்க மதுரை மத்திய சிறை நிர்வாகம் அனுமதி அளித்தது. அதன்பேரில் ஏராளமான உறவினர்கள் சிறைக்கைதிகளை சந்திப்பதற்காக வருகை தந்தனர்.
வீடியோ காலில் கைதிகள் பேச அனுமதி
கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறைகளில் கைதிகளை அவர்களது உறவினர்கள் சந்திக்க தடை விதிக்கப்பட்டது. அதற்கு மாற்றாக கைதிகள் செல்போனில் வீடியோ கால் மூலம் பேச ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி வீடியோ காலில் கைதிகள் பேசி வந்தனர்.
கட்டுப்பாடுகளுடன் கைதிகளை சந்திக்க அனுமதி
தற்போது கரோனா பரவல் குறைந்துள்ளதால் நேரில் சந்தித்துப் பேச அனுமதிக்கும்படி கைதிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து முதற்கட்டமாக மத்திய சிறைகளில் உள்ள கைதிகளை சில கட்டுப்பாடுகளுடன் சந்தித்து பேச சிறைத்துறை அனுமதி வழங்கியது.
கரோனா நெகட்டிவ் சான்றிதழ் முக்கியம்
சிறையில் உள்ள கைதிகளை சந்திக்க வரும் உறவினர்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்துக்குள் கரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என்ற சான்று வைத்திருக்க வேண்டும்.
சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களைத் தவிர மற்ற நாட்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சுமார் 15 நிமிடம் சிறைக்கைதிகளை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ’எழுவர் விடுதலை குறித்து எங்களால் முடிவெடுக்க முடியாது’ - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை