மதுரை மாவட்டம், செல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அபிநயா என்ற பெண்ணுக்கும் திருமணமான நிலையில், இவர்களுக்கு மூன்று வயதில் சிவனேஸ் என்ற ஒரு ஆண் குழந்தையும், இரண்டு வயதில் ரித்திகா என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.
அப்பகுதியில் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வந்த ஜெயச்சந்திரன் பல்வேறு நபர்களிடம் ஐந்து லட்ச ரூபாய் அளவிற்கு கடன் வாங்கி இருந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று (டிச.07) வழக்கம்போல் தம்பதியரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அபிநயா கோபித்துக்கொண்டு வீட்டில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த ஜெயச்சந்திரன் தன்னுடைய இரண்டு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அதிகாலை வீட்டினுள் மூவரும் மயங்கி கிடப்பதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் மூவரையும் மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இரண்டாவது குழந்தை ரித்திகா வரும் வழியிலேயே உயிரிழந்தார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் ஜெயச்சந்திரன், மூத்த குழந்தை சிவனேஸ் ஆகிய இருவரும் அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து மனைவி அபிநயா அளித்த புகாரின் அடிப்படையில், ஜெயச்சந்திரன் மீது செல்லூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: இளம்பெண் தற்கொலை: திருமணம் செய்ய வற்புறுத்திய ராணுவ வீரர் கைது!