கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று முதல் முதலமைச்சர் பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இன்று கிருஷ்ணகிரி செல்லும் முதலமைச்சர் நாளை சேலம், ஜூலை 17 ஆம் தேதி ஈரோடு செல்கிறார்.
இதனையொட்டி நேற்று (ஜூலை 14) நள்ளிரவு கிருஷ்ணகிரியின் மையப்பகுதியான சேலம் சாலை, பெங்களூரு சாலை, சென்னை சாலை உள்ளிட்ட நகரின் ரவுண்டானா பகுதியில் திடீரென நெடுஞ்சாலைத்துறையினர் சாலையோரம் உள்ள கடைகளை இடித்து தள்ளினர். எந்தவித முன்னறிவிப்புமின்றி கடைகளை இடித்து சேதப்படுத்தியது வியாபாரிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிருஷ்ணகிரி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் செங்குட்டுவன் நேரில் சென்று பார்வையிட்டு வியாபாரிகளுடன் சேர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "கரோனா காலத்தில் அன்றாடம் பிழைக்க வழியில்லாமல் வியாபாரிகள் சிக்கித் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் இடித்ததால் பல லட்சம் ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது.
இது மாவட்ட ஆட்சியருக்கு தெரிந்து நடக்கின்றதா? இந்த செயலில் ஈடுபட்ட அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என செங்குட்டுவன் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: காடுகளின் கவசம் யானைகள்!