கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் ரியல் எஸ்டெட் தொழில் செய்துவந்தவர் திமுக சிறுபான்மைப் பிரிவின் மாவட்ட துணை அமைப்பாளர் மன்சூர் அலி. இவர் கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதியன்று மாலை ஒசூர் அரசுப்பள்ளி மைதானத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்டபோது நான்கு பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பலால் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டார்.
பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய மன்சூர் அலியின் கொலை பழிக்குப்பழியாக நிகழ்த்தப்பட்டதா என்ற கோணத்தில் ஒசூர் நகர காவல் துறை விசாரணை செய்துவந்தனர். இச்சூழலில் மன்சூரைக் கொலை செய்ததாகப் பல்வேறு கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ரவுடி கஜா உள்பட நான்கு பேர் ஈரோடு மாவட்டம் கொடுமுடி நீதிமன்றத்தில் சரணடைந்திருந்தனர். சரணடைந்த நால்வரை நீதிமன்ற காவலில் எடுக்க ஒசூர் நகர காவல் துறையினர் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர். இந்நிலையில், நேற்று நால்வரும் ஒசூர் நீதிமன்றத்திற்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர்.
மேற்கொண்டு அசம்பாவிதங்கள் நடப்பதைத் தடுக்க கிருஷ்ணகிரி மாவட்ட ஏடிஎஸ்பி சக்திவேல் தலைமையில் 30க்கும் மேற்பட்ட காவலர்கள் நீதிமன்ற வளாகத்தில் குவிக்கப்பட்டிருந்தனர். பின்னர் சரணடைந்த நான்கு பேரும் ஒசூர் இரண்டாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்பு அவர்களை மீண்டும் ஒசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து நால்வரையும் காவல் துறையினர் சிறையிலடைத்தனர்.